எங்களுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கவில்லை - அதிமுகவினரை முற்றுகையிட்ட ஆர்.கே.நகர் மக்கள்

செவ்வாய், 19 டிசம்பர் 2017 (13:34 IST)
ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தள்ளிப்போன சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுதினம்(டிசம்பர் 21-ம் தேதி) நடைபெற உள்ளது. 
 
இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஆளுங்கட்சியான எடப்பாடி அணியினரும், ஆளுங்கட்சியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என எதிர்கட்சியான திமுகவும், சுயேச்சையில் போட்டியிடும் டிடிவி தினகரனும் மற்றும் இதர சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
அந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்.கே.நகர் வாசிகளுக்கு ரூ.6 ஆயிரத்தை அதிமுகவினர் வழங்கியதாக புகார் எழுந்தது. மொத்தம் ரூ.75 கோடி முதல் ரூ.100 கோடி வரை அன்றே பணப்பட்டுவாடா செய்து முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், வெளியூர் சென்றதாலும், வேறு சில காரணங்களாலும் தங்களுக்கு அதிமுக கொடுத்த ரூ.6 ஆயிரம் தங்களுக்கு கிடைக்கவில்லை எனக்கூறி 100க்கும் மேற்பட்டோர் காசிமேட்டில் உள்ள அதிமுக பணிமனையை நேற்று முற்றுகையிட்டனர். அங்கிருந்த அதிமுகவினரிடம் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
 
எனவே, அங்கிருந்த நிர்வாகிகள், பணம் பட்டுவாடா செய்பவர்களின் பெயர் மற்றும் தொலைப்பேசி எண்களை அவர்களிடம் கொடுத்து, அவர்களிடம் பேசும் படிக் கூறி அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர் எனக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்