புதுச்சேரி சிறுமி கொலை! பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலம்! – அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

Prasanth Karthick

புதன், 6 மார்ச் 2024 (09:56 IST)
புதுச்சேரியில் 9 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்து கொலை செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த நாராயணன் என்பவரது 9 வயது மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போன நிலையில் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் 3 நாட்கள் கழித்து சிறுமி உடல் அம்பேத்கர் நகர் வாய்க்காலில் மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமி உடலை உடனடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார் சிறுமியை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் உள்ள 19 வயது இளைஞரான கருணாஸ் மற்றும் 59 வயதான விவேகானந்தன் என்பவர்களை போலீஸார் பிடித்து விசாரித்தபோது சிறுமியை கொன்றது தாங்கள்தான் என அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டபோது சிறுமி உயிரிழந்துவிட்டதாகவும், அவரை சாக்குப்பையில் கட்டி கால்வாயில் வீசியதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை போக்சோ மற்றும் கொலை வழக்காக போலீஸார் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்