ஜெ. திரும்ப வரக்கூடாது என்பதற்காகவே பூஜை நடத்துகின்றனர் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சர்ச்சை பேச்சு

செவ்வாய், 15 நவம்பர் 2016 (18:14 IST)
கோவில்களில் அமைச்சர்கள் ஜெயலலிதா திரும்பவும் வரக்கூடாது என்பதற்காகவே பூஜைகள் நடத்துகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.


 

நடைபெறவுள்ள அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமியை ஆதரித்து, சின்னதாராபுரத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரசார மேற்கொண்டார்.

அப்போது பேசிய இளங்கோவன், ”அரவக்குறிச்சி தொகுதி மக்கள் பணத்திற்கு மயங்க மாட்டார்கள். இங்கு நிறுத்தப்பட்டிருக்கும் அதிமுக வேட்பாளர் மீது ஏராளமான புகார்கள் உள்ளது. அதிமுகவினர் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க முயற்சிக்கின்றனர்.

கோவில்களில் அமைச்சர்கள் எதற்காக பூஜைகள் நடத்துகிறார்கள் என்றால் அவர் திரும்பவும் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். தற்போது கைநாட்டு அரசியல் மட்டுமே நடைபெறுகிறது.

எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது அவரது போட்டோ பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டது. ஆனால் ஏன் இப்போது அவ்வாறு செய்யவில்லை. ஏன் மக்களை ஏமாற்ற வேண்டும்.

தற்போது தமிழ்நாட்டில் மணல் கொள்ளை அதிகரித்துவிட்டது. இதில் ஒவ்வொரு அமைச்சருக்கும் பங்கு போகிறது. அது குறித்த பட்டியல் என்னிடம் இருக்கிறது. இது சாதாரண இடைத்தேர்தல் அல்ல. தமிழகத்தில் இன்னும் 2 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்