அறவழி போராட்டத்தை அடிதடியாக கையாண்ட அரசு: இளைஞர்களை இழுத்து தள்ளிய காவல்துறை!

திங்கள், 23 ஜனவரி 2017 (09:20 IST)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வந்தன. சென்னை மெரினாவில் கடந்த 7 நாட்களாக போராட்டம் தீவிரமாக நடந்தது. இந்நிலையில் இந்த போராட்டக்காரர்களை காவல்துறை அதிரடியாக, வலுக்கட்டாயமாக இழுத்து கலைத்துள்ளனர்.


 
 
இளைஞர்கள், மாணவர்களின் போராட்டத்தால் அடிபணிந்த அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழி செய்தது. ஆனால் போராட்டக்காரர்கள் எங்களுக்கு அவசர சட்டம் தேவையில்லை. எங்களுக்கு நிரந்தர முடிவாக நிரந்தரமான சட்டம்தான் வேண்டும் என போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து வந்தனர்.
 
இதனால் செய்வதறியாமல் கையை பிசைந்து வந்தது தமிழக அரசு. குடியரசு தினம் வருவதால் கட்டாயமாக மெரினா கடற்கரையில் உள்ள லட்சக்கணக்கான போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நெருக்கடிக்குள்ளானது காவல்துறை.
 
இதனையடுத்து இன்று அதிகாலை ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு இந்த போராட்டத்தின் மைய்யப்புள்ளியாக இருந்து விவேகானந்தர் மண்டம் எதிரே உள்ள போராட்டக்கார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீங்களாகவே கலைந்து செல்லுங்கள் எனவும் அவசரச்சட்டம் குறித்தும் விளக்கினர் காவல்துறையினர்.
 
போராட்டத்தை கைவிடுவது குறித்து கலந்து ஆலோசிக்க தங்களுக்கு 4 மணி நேரம் கால அவகாசம் கேட்டனர் போராட்டக்காரர்கள். ஆனால் அவகாசம் கொடுக்காத காவல்துறையினர் அவர்களை அதிரடியாக இழுத்து வலுக்கட்டாயமாக அடிதடி நடத்தி அவர்களை இழுத்து சென்றனர். இதனால் அந்த பகுதி மிகுந்த பதற்றத்தில் உள்ளது. தொடர்ந்து போராட்டக்காரர்கள் மெரினா கடற்கரையின் அலையோரமாக குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்