90 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும்! – டீலிங்கை கசியவிட்ட ராமதாஸ்?

திங்கள், 2 மார்ச் 2020 (10:39 IST)
பாமகவின் தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் சட்டசபை தேர்தல் வெற்றி குறித்து பேசியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு போதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார்.

அதை தொடர்ந்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், வருகிற 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஜெயலலிதா, கருணாநிதி என்னும் இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் நடக்கப் போவதாக கூறினார். மேலும் கருணாநிதி போன்ற தலைவர்கள் இருந்திருந்தால் திமுக பிரசாத் கிஷோரை நாட தேவை இருந்திருக்காது என்று பேசிய அவர், 2021 சட்டசபை தேர்தலில் 90 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என பேசியுள்ளார்.

அவர் குறிப்பிட்டு 90 இடங்கள் என பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. பாமக ஏற்கனவே அதிமுகவிடம் தொகுதி பங்கீடுக்கு டீலிங் பேசி வைத்து விட்டார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் பாமக தனியாக நின்று போட்டியிடவும் வாய்ப்புள்ளதாக பேசப்பட்ட நிலையில் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்