கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு உடனடியாக ஒப்படைக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

புதன், 8 ஜூன் 2022 (17:34 IST)
கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க 11 கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட சுமார் 8000 ஏக்கர் நிலங்களை, அதற்கான இழப்பீட்டை திரும்ப வசூலிக்காமல், அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இது மகிழ்ச்சியளிக்கிறது
 
கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு  ஏக்கருக்கு ரூ.35,000 என்ற மிகக்குறைந்த விலையே தரப்பட்டதால் அதிக இழப்பீடு தர வேண்டும் அல்லது நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ம.க. தான் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது!
 
வன்னியர் சங்கத் தலைவராக இருந்த மாவீரன் குரு ஏற்பாடு செய்த பல போராட்டங்களில் நான் நேரடியாக பங்கேற்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தேன். பா.ம.க. நடத்திய போராட்டங்களின் பயனாகவே  இன்று உழவர்களுக்கு அவர்களின் நிலம் மீண்டும் கிடைத்துள்ளது!
 
பாட்டாளி மக்களின் நில உரிமையையும், வாழ்வுரிமையையும்  பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. மீதமுள்ள இரு கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களையும் அரசு உடனடியாக ஒப்படைக்க வேண்டும். அதைப் பெற்றுத் தரும்வரை பா.ம.க. ஓயாது!
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்