கேபி முனுசாமிக்கு அனுமதி மறுப்பு.! அதிகார மமதையில் அவமதிக்கும் திமுக - இபிஎஸ் கண்டனம்.!!

Senthil Velan

புதன், 11 செப்டம்பர் 2024 (16:55 IST)
அரசு நிகழ்ச்சியில் கே.பி.முனுசாமியை திமுகவைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க விடாமல் அராஜகம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேப்பனஹள்ளி தொகுதி ராமத்தொட்டி பகுதியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் அப்பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது. இந்த அரசு நிகழ்வில் அத்தொகுதி எம்.எல்.ஏ கே.பி முனுசாமி கலந்து கொள்ள வந்திருந்தார். ஆனால் அவரை நிகழ்ச்சியில் பங்கேற்க விடாமல் திமுகவினர் தடுத்ததாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கிருஷ்ணகிரி மாவட்டம் ராமன்தொட்டி பகுதியில் மத்திய அரசின் PMGSY திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில்,  வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கழக துணைப் பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமியை திமுகவைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க விடாமல் அராஜகம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.


ALSO READ: கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.! லேசான காயம் என தகவல்.!!
 
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அரசின் திட்டங்களுக்கான துவக்க விழாவில் கலந்துகொள்வது மரபு. ஆனால், அரசியல் நாகரிகம் என்பது கொஞ்சம் கூட இல்லாமல், அதிகார மமதையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை அவமதிக்கும் வகையில் அராஜகப் போக்குடன் செயல்படும் திமுகவின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்