பட்டுக்கோட்டையில் உள்ள அரசுப் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் தங்கியிருக்கும் ஆதிதிராவிடர் விடுதியில், இன்று காலை மாணவர்களுக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவிகள் இந்தச் சிற்றுண்டியைச் சாப்பிட்ட நிலையில், சில நிமிடங்களில் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
சுமார் 30 மாணவிகளுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மாணவிகளின் உடல்நிலை படிப்படியாகத் தேறி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காலை உணவாக சாதம், புளி குழம்பு, உருளைக்கிழங்கு பொரியல் சாப்பிட்டதாக மாணவிகள் கூறி வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.