பரந்தூர் விமான நிலையம்.. விவசாயிகளுக்கு ரூ.2 கோடி? நில மதிப்பீடு மற்றும் ஊக்கத்தொகை வழங்க முடிவு..!

Siva

திங்கள், 30 ஜூன் 2025 (09:23 IST)
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,746 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் பசுமை விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒருபுறம் மக்கள் போராடி வந்தாலும், அரசு பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.
 
இந்த நிலையில் நிலம் கையகப்படுத்துதலுக்கான விலை நிர்ணய விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.2.51 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
மொத்த நிலப்பரப்பில் 3,774.01 ஏக்கர் தனியார் பட்டா நிலங்களும், 1,972.17 ஏக்கர் அரசு நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன. வழிகாட்டி மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக இழப்பீட்டுத் தொகை (மொத்த மதிப்பிலிருந்து 275% கூடுதல்) மற்றும் 25% ஊக்கத் தொகை வழங்கப்படும்.
 
தொழில் மற்றும் முதலீட்டுத் துறை செயலாளர் அருண் ராய் வெளியிட்ட அரசாணையின்படி, வழிகாட்டி மதிப்பு ரூ.5 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை உள்ள நிலங்களுக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வழிகாட்டி மதிப்பு ரூ.17 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள 996 ஏக்கர் நிலங்களுக்கு ரூ.2.51 கோடி வரை ஏக்கருக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
 
சில சதுப்பு நிலங்களுக்கும், வட நிலங்களுக்கும் தனியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட 374.53 ஏக்கர் நிலத்துக்கு மட்டும் குறைந்தபட்சம் ரூ.40 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.60 லட்சம் வரை வழங்க காஞ்சிபுரம் ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.
 
விலை நிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களின் நிலங்களும், அதன் அமைப்புகளும் உரிய துறைகள் வாயிலாக மதிப்பீடு செய்யப்பட்டு, அவர்களுக்கும் 100% இழப்பீடு மற்றும் 25% ஊக்கத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்