தொடங்கியது தர்மயுத்தம் 2.0 !? – ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டம்!

புதன், 22 ஜூன் 2022 (13:39 IST)
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி கூறி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணி அதை மறுத்து வருகிறது. இந்நிலையில் நாளை நடக்கவிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாறிய நிலையில், இந்த பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்கும்படி உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் ஒற்றைத் தலைமை முடிவை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நினைவிடத்தில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அங்கு அவர்கள் ”எடப்பாடியே துரோகத்தை நிறுத்து” என கோஷமிட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொள்ள உள்ளாரா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்