தினகரன் - எடப்பாடி கூட்டுதான் ; வெளிய நடிக்கிறாங்க : அதிமுகவில் சலசலப்பு

வியாழன், 22 பிப்ரவரி 2018 (12:40 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சசிகலா மற்றும் தினகரன் தரப்பினரிடம் ரகசியமாக கூட்டு வைத்திருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முனுமுனுத்து வருகின்றனர்.

 
இரு அணிகள் இணைந்த பின் ஓ.பி.எஸ்-ஸிற்கு துணை முதல்வர் பதவி, மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி, மதுசூதனன், கே.பி.முனுசாமி, செம்மலை, பி.ஹெச். பாண்டியன் ஆகியோருக்கு நிர்வாகிகள் பதவி என எடப்பாடி தரப்பு கொடுத்தது. ஆனாலும், அவர்களுக்கு கொடுப்பதாய் கூறிய சில வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
 
எனவே, ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அனைவரும் அதிருப்தியில் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், அவர்களை சமாளித்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். இருந்தாலும், ஓ.பி.எஸ் தரப்பின் ஒரு பக்கம் புகைந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

 
தினகரனுக்கு எதிராக இருப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டு, உள்ளுக்குள் அவர்கள் இணக்கமாகத்தான் செயல்படுகின்றனர். ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை ஒதுக்கி வைத்திருக்கும் எடப்பாடி தரப்பு, தினகரன் ஆதரவு நபர்களிடம் இன்னமும் நட்பு பாராட்டி வருகின்றனர் என்பதுதான் ஓ.பி.எஸ் தரப்பு குற்றச்சாட்டு. இந்த விவகாரம், அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
 
அதேபோல், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் ஒருவேளை எடப்பாடி அணிக்கு எதிராக தீர்ப்பு வந்தால், அந்த எம்.எல்.ஏக்களில் சிலருக்கு அமைச்சர் பதவியை தந்து தங்கள் பக்கம் தக்க வைக்க முதல்வர் தரப்பு முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்