ஆளுநருக்கு ஓபிஎஸ் பரபரப்பு கடிதம்: தனிப்பட்ட பிரச்சனை இருப்பதால் ராஜினாமா!

திங்கள், 6 பிப்ரவரி 2017 (08:56 IST)
தமிழக முதல்மைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து புதிய முதல்வராக சசிகலா பதவியேற்க உள்ளார். இதனால் தமிழகம் சசிகலா முதல்வராவதை பரபரப்பாக பேசிவருகிறது.


 
 
ஜெயலலிதா இறந்த பின்னர் அவசர அவசரமாக பன்னீர்செல்வம் முதல்வரானார். பின்னர் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆனார். அப்பொழுதில் இருந்தே சசிகலா முதல்வராக சிலர் குரல் கொடுத்து வந்தனர். ஆனால் அந்த நிகழ்வு தள்ளிக்கொண்டே போனது. ஒரு வழியாக தற்போது சசிகலா முதல்வராகும் சம்பவம் நடைபெற உள்ளது.
 
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அவசர அவசரமாக நேற்று பிற்பகல் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கட்சியின் சட்டமன்ற தலைவராகவும், தமிழக முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இதனையடுத்து முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதம் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பப்பட்டது. அந்த ராஜினாமா கடிதத்தில் தனது ராஜினாமாவுக்கு காரணம் தனிப்பட்ட பிரச்சனை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்யும் எனது ராஜினாமா கடிதத்தை ஏற்றுகொண்டு எனது தலைமையிலான அமைச்சரவையை கலைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்