மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7ஆம் தேதிஅரசு விடுமுறை என சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்த தகவல் வதந்தியே என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், பலரும் எதிர்பார்த்து காத்திருந்த விடுமுறை குறித்த குழப்பங்களுக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளது.
"மொஹரமை முன்னிட்டு ஜூலை 7ஆம் தேதி அரசு விடுமுறை என்று பரவும் தகவல் முற்றிலும் தவறானது. கடந்த 2025 ஜூன் 26 அன்று காயல்பட்டினத்தில் மொஹரம் மாதப் பிறை தென்பட்டது. எனவே, ஜூன் 27, 2025 அன்று மொஹரம் மாதத்தின் முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், யொமே ஷஹாதத் (தியாகத் திருநாள்) ஜூலை 6, 2025 ஞாயிற்றுக்கிழமை ஆகும்," என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
மொஹரம் பண்டிகை, வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால், அதற்கு அடுத்த நாளான ஜூலை 7, 2025 திங்கட்கிழமை அரசு விடுமுறை இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.