ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ் - ஜெயகுமார் சாடல்!

திங்கள், 27 ஜூன் 2022 (12:28 IST)
கட்சி விதிகளை ஓபிஎஸ் அறியாமல் உள்ளாரா அல்லது அறிந்தும் அறியாதது போல் நடந்து கொள்கிறாரா என்பது தெரியவில்லை என ஜெயகுமார் சாடல். 
 
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. சில நாட்கள் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த பேச்சால் பரபரப்பு எழுந்த நிலையில் எந்த வித தீர்மானமும் நிறைவேறாமல் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.
 
இந்நிலையில் திடீரென இன்று அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அதிமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த அறிவிப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
 
இதனிடையே தற்போது ஆலோசனை கூட்டம் முடிந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார். அப்போது அவர் ஓபிஎஸ்-ஐ கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது, ஒற்றை தலைமையே கட்சியின் ஒட்டுமொத்த நிலைப்பாடாக உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார். 
 
கட்சி விதிகளை ஓபிஎஸ் அறியாமல் உள்ளாரா அல்லது அறிந்தும் அறியாதது போல் நடந்து கொள்கிறாரா என்பது தெரியவில்லை. தூங்குவது போல் ஓபிஎஸ் நடிக்கிறார். ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் தான். அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்திருக்கிறார். அவர் பொருளாளர் பதவியில் தொடருவாரா என்பதை பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்