சற்றுமுன் ஓபிஎஸ் மரணம்: சட்டசபையில் புகைப்படத்துடன் ஆதாரம் காட்டிய முதல்வர்

வெள்ளி, 27 ஜனவரி 2017 (15:48 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் நுழைந்த சமூக விரோதிகள் சற்றுமுன் ஓபிஎஸ் மரணம் உள்ளிட்ட போஸ்டர்களை வைத்ததாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழக சட்டசபையில் பேசினார்.


 
 
ஜல்லிக்கட்டு போராட்டதின் போது சென்னையில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக சட்டசபையில் இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தின் போது சில போஸ்டர்களை சபாநாயகரிடம் அளித்து விளக்கமளித்தார்.
 
அப்போது பேசிய முதல்வர், ஜல்லிக்கட்டு போராட்டம் அமைதியாக நடைபெற்ற போது சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் குடியரசு தின விழாவை சீர்குலைக்க திட்டமிட்டிருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் வெளியானது.
 
அதனால் கடந்த 23-ஆம் தேதி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் நடத்தியவர்களை கலைந்து கலைந்து செல்லுமாறு கூறினர், அதில் 3000 பேர்வரை கலைந்து சென்றனர். ஆனால் சில அமைப்பினர் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு நிரந்தர சட்டம், காவிரி முல்லை பெரியாறு பிரச்சினை, பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்தனர்.
 
மேலும் சில அமைப்பினர் ஒசாமா பின்லேடன் தொடர்பான பதாகைகளையும். தனி தமிழ்நாடு கோரிக்கை, குடியரசு தினத்தை கறுப்பு தினமாக அனுசரிப்போம் என்று கூறும் வகையில் பேனர்களை வைத்திருந்தனர் என்றார். அதனுடன் இன்னொரு பேனரும் வைத்திருந்தனர்.
 
அதில் சற்று முன் ஓபிஎஸ் மரணம் என்கிற பேனரும் வைத்திருந்தனர். இதனை அனைவருக்கும் சட்டசபையில் காட்டினார் முதல்வர். இதனையடுத்தே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்