கடந்த சில நாட்களாக பாட்டாளி மக்கள் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ஆகஸ்ட் 10ஆம் தேதி பூம்புகாரில் நடைபெறவிருக்கும் மகளிர் மாநாடு குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது என்றும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும் பணி நடைபெற்றதாகவும் தெரிவித்தார். மேலும், "பாமகவில் இணைச் செயலாளர் பதவி எம்.எல்.ஏ. அருள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் எப்போதும் என்னுடன் இருப்பார் என்பதால் அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது," என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு மட்டுமே பாமகவில் முழு அதிகாரம் உள்ளது. என்னை சந்தித்து கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மட்டும்தான் தேர்தலில் சீட் வழங்கப்படும்," என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். கூட்டணி குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்றும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆலோசனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.