தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்து கட்டணம் கிடுகிடுவென உயர்ந்த நிலையில் அரசின் தலையீட்டிற்கு பிறகு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் ஏற்கனவே அரசு விரைவு பேருந்துகள், ரயில்கள் முழுவதும் புக்கிங் ஆகியுள்ள நிலையில் பலரும் தனியார் ஆம்னி பேருந்துகளை நாடத் தொடங்கியுள்ளனர்.
இதனால் தனியார் ஆம்னி பேருந்து கட்டணம் 4 மடங்கு விலை உயர்ந்தது. சென்னை - நாகர்கோவில் ஏசி பேருந்துக்கு ரூ.4,400 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை - திருச்சி ஆம்னி பேருந்துகளில் ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
அதை தொடர்ந்து அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்து ஆணையர் எச்சரித்தார். மேலும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் 30 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. திருச்சி, கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் 50 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண முறை பின்பற்றப்படுகிறதா என்பதை போக்குவரத்துத் துறை சார்பில் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K