நெய்வேலி தீ விபத்தில் ஊழியர் பலி: ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோரிக்கை

வியாழன், 22 டிசம்பர் 2022 (18:25 IST)
நெய்வேலி அனல்மின் நிலையத்தில் இன்று நடந்த தீ விபத்தில் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
நெய்வேலி என்.எல்.சி புதிய அனல் மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் இன்று பிற்பகல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் திருநாவுக்கரசு என்ற தொழிலாளி உயிரிழந்தார்; 4 தொழிலாளிகள் படுகாயமடைந்தனர் என்ற செய்தியறிந்து  அதிர்ச்சியடைந்தேன். திருநாவுக்கரசு மறைவுக்கு எனது இரங்கல்.
 
காயமடைந்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செல்வராஜ், சுரேஷ், தட்சிணாமூர்த்தி,  செந்தில்குமார் ஆகியோருக்கு தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் விரைந்து குணமடைய வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
என்.எல்.சியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிகழும் மூன்றாவது  பாய்லர் விபத்து இதுவாகும். என்.எல்.சியில் தொழிலாளர்களின் உயிருக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. விபத்து குறித்து விசாரணை நடத்துவதுடன், இனி இத்தகைய  விபத்து நடக்காமல் தடுக்க வேண்டும்!
 
விபத்தில் உயிரிழந்த  திருநாவுக்கரசு குடும்பத்திற்கு  என்.எல்.சி ரூ 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்த தொழிலாளர்களில் உடல் முடக்கம் அடைந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் வீதமும், மற்றவர்களுக்கு ரூ.25 லட்சம் வீதமும் இழப்பீடு வழங்க  வலியுறுத்துகிறேன்!
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்