நெல்லையில் வயதான தம்பதிகளை தாக்கிய இருவர் கைது!

வியாழன், 3 அக்டோபர் 2019 (21:35 IST)
நெல்லை மாவட்டம் கடையம் அருகே வயதான தம்பதியை தாக்கிய கொள்ளையர்களை அந்த தம்பதிகள் இருவரும் அடித்து விரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சண்முகவேல்-செந்தாமரை என்ற இந்த தம்பதிகளை நேரில் அழைத்த தமிழக முதல்வர் சுதந்திர தினத்தில் விருது கொடுத்து கெளரவப்படுத்தினார்

இந்த நிலையில் வயதான தம்பதிகளை தாக்கிய இரண்டு கொள்ளையர்களை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் தற்போது கொள்ளையர்கள் இருவரும் கீழ கடையம் ரயில்நிலையத்தின் முன்பு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிடிபட்ட கொள்ளையர்களில் ஒருவன் கீழகடையத்தை சேர்ந்த பாலமுருகன் என்பதும், மற்றொருவன் தூத்துக்குடி சவலப்பேரியை சேர்ந்த பெருமாள் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து வயதான தம்பதிகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 35 கிராம் தாலிசெயின் கைப்பற்றப்பட்டது. மேலும் கொள்ளையர்கள் பயன்படுத்திய இரு அரிவாள், ஒரு ஏர் கன் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும், இவர்களில் பாலமுருகன் ஏற்கனவே 38 வழக்குகளில் தொடர்புடையவன் என்றும், பெருமாள் மீது 8 வழக்குகள் உள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வழக்கம்போல் கைது செய்யப்பட்ட இரண்டு கொள்ளையர்களும் வழுக்கி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்