பணம் பரப்பன அக்ரஹாரா சிறை வரை பாயும்: எச்.ராஜாவின் ரைமிங் பன்ச்!

சனி, 15 ஜூலை 2017 (14:41 IST)
சசிகலா சிறையில் சொகுசாக இருக்க சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ரமிங்கில் பன்ச் டயலாக் பேசியுள்ளார்.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது எனவும் அதற்காக அவர் சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் பரபரப்பை கிளப்பினார் சிறைத்துறை டிஐஜி ரூபா.
 
இந்த விவகாரம் இரு மாநிலத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனையடுத்து பலரும் இந்த விவகாரம் குறித்து தங்கள் கருத்துக்களை கூறிவருகின்றனர். இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இது குறித்து கோவையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.
 
பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால் தற்போது பணம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறை வரை பாய்ந்துள்ளது என எச்.ராஜா கூறினார். மேலும் தமிழகத்தில் இருந்து அதிமுக, திமுக கட்சிகளை மக்கள் அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்