திமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம்

Mahendran

புதன், 7 பிப்ரவரி 2024 (15:25 IST)
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:
 
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்டது. 2019 நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு மனிதநேய மக்கள் கட்சி அரும்பாடுபட்டது.
 
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட பாபநாசம், மணப்பாறை ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மனிதநேய மக்கள் கட்சி வெற்றி வாகை சூடியது. 
 
போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் மமக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. “இந்தியா” கூட்டணியின் அங்கமான மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு முழுவதும் கூட்டணியின் கருத்தியலை மக்களிடம் கொண்டு செல்வதில் முன்னிலை வகிக்கின்றது. 
 
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்த இறுதி முடிவை எடுக்கும் அதிகாரத்தை இப்பொதுக்குழு தலைமை நிர்வாகக் குழுவிற்கு வழங்குகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்