இது முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி! – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

வெள்ளி, 19 நவம்பர் 2021 (11:00 IST)
வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.

மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நிலையில் விவசாயிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா காலகட்டத்திலும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று நாட்டு மக்களுடன் உரையாடிய பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். இதை பல அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்! மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்!” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் “உழவர் பக்கம் நின்று போராடியதும் - வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்! அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்!” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்