மு.க.ஸ்டாலின் மெரினாவில் காலவரையற்ற உண்ணாவிரதம்: பதற்றத்தில் தமிழகம்!

சனி, 18 பிப்ரவரி 2017 (16:14 IST)
தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி 122 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று இன்று தனது அரசின் பெரும்பான்மையை நிரூபித்துள்ளார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு எதிர்க்கட்சிகள் வெளியேற்றப்பட்டு நடத்தப்பட்டது.


 
 
சட்டசபை தொடங்கியதும் இன்று கடும் அமளி நிலவியது. அதிமுகவின் ஓபிஎஸ் அணி, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ரகசிய வாக்கெட்டுப்பை கேட்டனர். ஆனால் சபாநாயகர் இதனை ஏற்கவில்லை. இதனால் சட்டசபை அமளியால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
 
சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி மூன்றாவது முறையாக அவை கூடியது. இதில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் வாக்கெடுப்பை நடத்தி 122 வாக்குகள் ஆதரவும், 11 வாக்குகள் எதிர்ப்பும் பெற்று எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து சட்டசபையில் தாங்கள் தாக்கப்பட்டது, வெளியேற்றப்பட்டது, அதன் பின்னர் வாக்கெடுப்பை நடத்தியது குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து புகார் அளித்தனர்.
 
இதனை கேட்ட ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதுகுறித்து பரிசீலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து திடீரென திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த போராட்டம் அறப்போராட்டம் என கூறப்பட்டுள்ளது. இதனால் மிகவும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ஆளுநர் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்