நல்லா நாடகம் ஆடுறீங்க மிஸ்டர்! - எடப்பாடியாரை தொடர்ந்து தாக்கும் ஸ்டாலின்!

செவ்வாய், 21 ஜனவரி 2020 (09:42 IST)
ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியது நாடகம் என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மக்களின் கருத்துக்களை கேட்காமல் ஹைட்ரோகார்பன் குழாய்கள் அமைக்க நிறுவனங்களுக்கு அனுமதி தரும் புதிய விதியை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிராக மக்களும், விவசாயிகளும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டும் காணாது இருப்பதாகவும், உடனடியாக இது குறித்து மத்திய அரசிடம் அவர் பேச வேண்டும் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் பிரச்சினை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் மக்கள் கருத்துகளை கேட்காமல் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு உடன்பாடு இல்லை என்றும், மத்திய அரசு தனது அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வரின் இந்த கடிதம் குறித்து மீண்டும் விமர்சனம் வைத்துள்ள மு.க.ஸ்டாலின் முதல்வர் சரியான நடவடிக்கை எடுக்காமல் நாடகம் ஆடுவதாக கூறியுள்ளார்.
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார். எடுத்தால் நாடகம் என்கிறார். என்னதான் சொல்ல வருகிறார் என அரசியல் வட்டாரங்கள் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்தால் குழப்பம் அடைந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்