டிரெண்டுக்காக அரசியல் பேசும் விஜய் - அதிமுக அமைச்சர் பதிலடி

புதன், 3 அக்டோபர் 2018 (15:26 IST)
சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் அரசை விமர்சித்து பேசியதற்கு அமைச்சர் உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபகாலமாக விஜய் அரசியல் சார்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் தனது அரசியல் பிரவேசத்திகு அடிபோட்டார். இந்த படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை, ஒருவேளை நான் முதல்வரானால், ஊழலை ஒழிக்க முயற்சி செய்வேன், ஆனால் அது முடியுமா? என்று தெரியவில்லை என்று கூறினார். 
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி, உதயகுமார் நடிகர்கள் அரசியலைப் பற்றி பேசி தங்களை பெரிய ஆளாக்கிக் கொள்ள விரும்புகிறார்கள், இதனை பலர் டிரெண்டாகவே மாற்றி வருகிறார்கள். அரசியலை வைத்து படம் எடுத்தால், மக்களிடம் வரவேற்பு கிடைக்கும். அதன் மூலம் பப்லிசிட்டி பெறலாம், படமும் நன்றாக ஓடும் என்று தான் நடிகர்கள் நினைக்கிறார்கள். 
 
இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்த கமல்ஹாசன், தற்பொழுது மாற்றம் செய்யப்போகிறேன் என புலம்பிக்கொண்டிருக்கிறார். மறுபுறம் நடிகர் விஜய் அரசை குறை கூறிருக்கிறார். அவர்களுக்கு அரசியலைப் பற்றியெல்லாம் என்ன தெரியும்? 
 
இவ்வளவு பேசும் நடிகர்களுக்கு அரசியலில் ஈடுபடும் அளவுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை கிடையாது. அவர்கள் ஒழுங்காக அவர்களது வேலையை செய்யட்டும். அம்மா அரசு ஏராளமான நலத்திட்டங்களை செய்து வருகிறது என அமைச்சர் காட்டமாக பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்