வாழப்பாடி அருகே, சப்பாத்தியுடன் சிக்கன் சாப்பிட்ட ஒருவர், சிக்கன் எலும்பு தொண்டையில் சிக்கியதை அடுத்து மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே, மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பைரன் முர்கூர் என்பவர், தனது குடும்பத்துடன் வாழப்பாடியில் தங்கி இருந்து தனியார் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று இரவு, அவர் சப்பாத்தியுடன் சிக்கன் கறி சமைத்து சாப்பிட்ட போது, திடீரென சிக்கன் எலும்பு தொண்டையில் குத்தியதாக தெரிகிறது.
இதனால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. பின்னர், மயங்கி விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அந்த சம்பவத்தால், அவரது மனைவி சரஸ்வதி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, உயிரிழந்த பைரன் முர்கூர் உடலை வாழப்பாடி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.