மதுரையில் ஜூன் 22-ஆம் தேதி நடைபெறவிருக்கும் முருக பக்தர் மாநாட்டிற்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதனால், மாநாட்டை நடத்தத் தயாராகி வந்த முருக பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள திடலில் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இதனிடையே, மாநாட்டு அரங்கில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை அமைத்து, 10 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்த விழாக்குழு சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், காவல்துறை இதற்கு ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, மாநாடு நடத்தவும், கோயில் மாதிரிகளை வைத்து பூஜை செய்யவும் அனுமதி கோரி, மதுரையை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி பி. புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, விழாவுக்கு அனுமதி தொடர்பாக காவல்துறை கேட்கும் கேள்விகளுக்கு விழாக்குழுவினர் முழுமையாக பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 13-க்கு ஒத்திவைத்திருந்தார்.
அதன்படி, மீண்டும் நீதிபதி பி. புகழேந்தி முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பு, முருக பக்தர் மாநாட்டிற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, "மத நிகழ்ச்சியில் அரசியல் கண்டிப்பாக கலக்கக் கூடாது" என்ற முக்கிய நிபந்தனையுடன், மாநாட்டில் அறுபடை வீடுகளின் கோயில் மாதிரிகளை அமைத்து, ஆன்மீக வழிபாடுகளை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பின் மூலம், மாநாட்டிற்கு ஏற்பட்ட தடை நீங்கியுள்ளது, முருக பக்தர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.