அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவு!

வியாழன், 11 ஜனவரி 2018 (14:39 IST)
சாலை போக்குவரத்து அலுவலகத்தில் வாகன எண் பதிவுக்கு வந்த புதுச்சேரியை சேர்ந்த அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி.
 
புதுச்சேரியின் முதலியார்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் பாஸ்கர். இவர் சாலை போக்குவரத்து அலுவலகத்தில் வாகன பதிவுக்கு வந்தபோது விதிகளை மீறி நிறைய பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
 
இதனையடுத்து அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இதனால் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
 
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் அம்மாநில முதல்வருக்கும் இடையே மோதல் போக்கே நீடித்து வருகிறது. துணைநிலை ஆளுநர் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாலேயே இந்த மோதல் ஏற்படுகிறது. இந்நிலையில் எம்எல்ஏ ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவிட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்