ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு மு.க.ஸ்டாலின் சென்றது, அவரின் வருகைக்கு ஜெயலலிதாவின் நன்றியும், அவருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்காதது குறித்து எழுந்த சர்ச்சைக்கு ஜெயலலிதா விளக்கம் அளித்தது, சட்டசபை வளாகத்தில் ஜெயலலிதாவும், ஸ்டாலினும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்தது, ஜெயலலிதா திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் வாழ்த்து கூறியது, திமுக உடன் சேர்ந்து தமிழக மக்களின் மேம்பாட்டுக்கு உழைக்க இந்த அரசு எதிர்நோக்கி உள்ளது என ஜெயலலிதா கூறியது இவை எல்லாம் சட்டசபை தேர்தலுக்கு பின் தமிழகத்தில் நிகழ்ந்த அரிய நிகழ்வு.
இதற்கு பதில் அளித்த திமுக தலைவர் கருணாநிதி, திமுக எந்த சவால்களையும் சந்திக்கும். தற்போது திமுகவை விட அதிமுகவுக்கு தான் சவால்கள் அதிகம். ஒரு எம்.எல்.ஏ மறைந்த பிறகு அதிமுகவின் பலம் தற்போது 130-ஆக உள்ளது. குறைந்த பட்ச பெரும்பான்மையை விட 12 எம்.எல்.ஏ.க்கள் தான் அதிகம்.
இந்த எம்.எல்.ஏ.க்கள் சலனப்படாமல் இருப்பதும், இவர்களைப் பத்திரமாக தங்களிடமே தக்கவைத்துக் கொள்ளுவதும் அதிமுகவின் முன்னுள்ள சவால். இது மெல்லியதோர் கயிற்றின் மீது நடப்பது போன்றது என பதில் அளித்தார் கருணாநிதி.