வெற்றி துரைசாமி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

Sinoj

செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (13:15 IST)
இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் சட்லஜ் ஆற்றில் விழுந்து உயிரிழந்த முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன்  மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர், படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்ய  தன் நண்பர் கோபிநாத்துடன் இமாச்சலப்பிரதேச மாநிலத்துக்கு சென்றிருந்தார்.
 
இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள கஷங் நாலா பகுதியில் இவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் ஆற்றில் கடந்த 4ஆம் தேதி கவிழ்ந்தது.
 
விபத்து குறித்து தகவலறிந்த சென்ற மீட்புப் படையினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கோபிநாத்தை மீட்டனர். ஆனால், வெற்றி துரைசாமியும், உள்ளூரை சேர்ந்த கார் ஓட்டுநர் தன்ஜினும் காணாமல் போன நிலையில், வெற்றி துரைசாமியை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 
 
இந்த நிலையில்  சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் சட்லஜ் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இது சைதை துரைசாமியின் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
வெற்றியின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
அதில், ''சென்னையின் முன்னாள் மேயர், நண்பர் சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்குகிறது. 
 
வாழத் தொடங்கும் வயதில் கம்பீரமாகத் தன் பணிகளைச் செய்துவந்த இளைஞர் இப்படியொரு விபத்தில் இறுதியை அடைந்தது எண்ணத் தாளாத துக்கம். 
 
மகனை இழந்து தவிக்கும் தந்தையை கனத்த மனத்தோடு ஆறுதல் கூறித் தழுவிக்கொள்கிறேன். அவர் விரைவில் இத்துயரிலிருந்து மீள வேண்டும்''என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்