5 நாள் விசாரணை, அடுத்து தீர்ப்பு: 18 எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கில் ஹைகோர்ட் அதிரடி!

புதன், 4 ஜூலை 2018 (18:31 IST)
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 3 வது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது இவரது தலைமையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. 
 
2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.  
 
இதையடுத்து, அவர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி முடிந்து இன்னும் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் இருந்தது.    
 
இதனிடையே, கடந்த மாதம் 14 ஆம் தேதி 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை கூறியதால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 
 
இந்நிலையில், 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதிவரை தினசரி வழக்கை விசாரிக்க உள்ளதாகவும், அதன்பிறகு தீர்ப்பு வழங்க உள்ளதாகவும் மூன்றாம் நீதிபதி தெரிவித்தார். 5 நாட்கள் வழக்கு விசாரணைக்கு பிறகு, தீர்ப்பு ஏதாவது ஒரு நாளில் வழங்கப்படும். 
 
ஆக மொத்தம், ஆகஸ்ட் மாதம் வாக்கில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. 5 நாட்களுக்கு முன்பாகவே விசாரணை நிறைவடையவும் வாய்ப்புகள் உள்ளது என்கிறார்கள் சட்டத்துறை வல்லுநர்கள். அப்படியானால், இம்மாத இறுதிக்குள்ளாக கூட தீர்ப்பு வெளியாகலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்