சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குழப்பமானது - அருண்மொழித்தேவன்!

வியாழன், 3 மார்ச் 2022 (11:25 IST)
பெரியகுளத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தேவையற்றது என கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ. பேட்டி. 

 
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி வகித்து வரும் நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிக்கலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என சிலர் அவ்வபோது கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் குறைந்ததில் அமமுக கட்சிக்கும் பங்குண்டு என பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் கட்சிக்கு இரட்டை தலைமை தேவையா என்ற கேள்வி கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தேனி அதிமுக கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டபோது பலரும் சசிக்கலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் தற்போது அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, அதிமுகவிற்கு இரட்டை தலைமை தேவையில்லை. ஒற்றை தலைமைதான் தேவை. சசிக்கலாவை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும் என பேசியுள்ளார். இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளதாக தெரிகிறது.
 
இதனைத்தொடர்ந்து இதுகுறித்து கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ. பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, சசிகலா அதிமுக உறுப்பினரே கிடையாது. 90% அதிமுகவினர் சசிகலாவை ஏற்றுக்கொள்ளவில்லை. சசிகலாவை அதிமுகவில் சேர்க்க சொல்வது குழப்பத்தை ஏற்படுத்தும். அவரை மீண்டும் கட்சியில் சேர்கக்கூடாது என்பதே தொண்டர்களின் எண்ணம்.
 
பெரியகுளத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தேவையற்றது. இது கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. அது தற்காலிகம் தான். மீண்டும் அதிமுக எழுச்சிபெறும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்