மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் செல்போன் மாயம்..! உறவினர்களிடம் தனிப்படை தீவிர விசாரணை..!

Senthil Velan

திங்கள், 6 மே 2024 (12:44 IST)
எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் செல்போன் மாயமான நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங். இவர் 4 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி. சிலம்பரசனுக்கு அனுப்பிய மனுவில், தனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருவதாகவும், அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
 
இதையடுத்து மே 2ம் தேதி  ஜெயக்குமார் மாயமான நிலையில், அவரது மகன் கருத்தய்யா உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே உவரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜெயக்குமாரின் தோட்டத்திற்கு உள்ளே, ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
 
இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்,  மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் கைரேகைகளையும் பதிவு செய்தனர். நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், முக்கிய சாட்சியமாக இருந்த ஜெயக்குமாரின் செல்போன் மாயமாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா.? உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கோரிய ED..!
 
தற்போது உயிரிழந்த ஜெயக்குமாரின் செல்போன் மாயமாகி இருக்கக்கூடிய சூழ்நிலையில் அவரது உறவினர்களிடமும் மகன்களிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமாரின் உறவினரும், தனியார் மருத்துவமனை மயக்கவியல் மருத்துவருமான செல்வகுமாரிடம் போலீஸ் விசாரணை நடத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்