ஜெயலலிதா சிகிச்சை வீடியோக்கள் அழிந்துவிட்டது; அப்பல்லோ மருத்துவமனை

புதன், 19 செப்டம்பர் 2018 (15:18 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி வீடியோக்கள் அழிந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழப்பதற்கு முன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
 
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா குடும்பத்தினர்தான் காரணம் என்றும் கூறி வருகின்றனர். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை போக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
 
நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட சிசிடிவி வீடியோ பதிவுகளை விசாரணை ஆணையம் கேட்டு இருந்தது.
 
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை வழக்கறிஞர் மைமூனா பாஷா கூறியதாவது:-
 
எங்களால் வீடியோ பதிவுகளை சம்ர்பிக்க முடியவில்லை என்பதை தெரிவித்து இருக்கிறோம். முக்கியமான சில இடங்களில் உள்ள சிசிடிவு பதிவுகளை 30 நாட்களுக்கு மட்டுமே சேமிக்க முடியும். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போதும் இந்த நிலைமைதான் இருந்தது என்று கூறியுள்ளார்.
 
இதன்மூலம் அவர்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது இருந்த சிசிடிவி வீடியோக்கள் சேமிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விசாரணை ஆணையம், நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்து பழைய வீடியோ பதிவுகள் உள்ளதா என தேடி பார்க்க உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்