வானிலை மையம் எச்சரிக்கை - பீதியில் தமிழக மக்கள்

புதன், 1 நவம்பர் 2017 (11:27 IST)
நவம்பர் 5ம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதிலும், கடந்த இரு நாட்களாக சென்னை உள்ளிட்ட  8 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.  
 
அந்நிலையில், நேற்று சென்னையின் பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பள்ளமான பகுதிகளில் நீர் தேங்கியது. பல வீடுகளில் மழை தண்ணீர் புகுந்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சென்னை வாசிகள் வீடுகளை விட்டு வெளியேறி தங்கள் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.  


 

 
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்தது போல் சென்னை மீண்டும் ஒரு மழையை சந்திக்குமோ என்கிற பயம் சென்னை வாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், மன்னா வளைகுடா அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்னும் 5 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, தெற்கு கடலோர ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் ராயலசீமா பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்