வெளுத்து வாங்கிய மழை - பீதியில் சென்னை வாசிகள்

புதன், 1 நவம்பர் 2017 (09:30 IST)
நேற்று இரவு விடிய விடிய சென்னையில் மழை பெய்ததால் சென்னை வாசிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.


 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதிலும், கடந்த இரு நாட்களாக சென்னை உள்ளிட்ட  8 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 
 
சென்னையை பொறுத்தவரை, நேற்று மாலை மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. ஆனால், பகலில் பெரிதாக மழை இல்லை. அதேபோல், மாலையிலும் மழை பெய்யவில்லை. ஆனால், எல்லாவற்றுக்கும் சேர்த்து இரவு 11 மணிக்கு மேல் சென்னையில் பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.
 
இதனால், சென்னையில் உள்ள பள்ளமான பகுதிகளில் நீர் தேங்கியது. பல வீடுகளில் மழை தண்ணீர் புகுந்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சென்னை வாசிகள் வீடுகளை விட்டு வெளியேறி தங்கள் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். 
 
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்தது போல் சென்னை மீண்டும் ஒரு மழையை சந்திக்குமோ என்கிற பயம் சென்னை வாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்