முகிலன் காணாமல் போன வழக்கு – மத்திய அரசுக்கு ஐ நா உத்தரவு !

செவ்வாய், 18 ஜூன் 2019 (10:41 IST)
காணாமல் போன சுற்றுசூழல் போராளி முகிலன் வழக்கு தொடர்பான விசாரணை விவரங்களை ஐ நா ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னைப் பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆலை நிர்வாகத்தோடு சேர்ந்து தமிழகக் காவல்துறையினர் அப்பாவிப் பொதுமக்களை எப்படி சுட்டு வீழ்த்தினர் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி அறிக்கை வெளியிட்டார் முகிலன்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ ஆவணங்களை சி.பி.ஐ-யிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்போவதாகவும் முகிலன் அறிவித்திருந்தார். அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துவிட்டு  சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலமாக மதுரைக்குக் கிளம்பிய முகிலன் காணாமல் போயுள்ளார். ஆனால் அவர் வாட்ஸ் ஆப்பில் இரவு 11 மணிவரை ஆன்லைனில் இருந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

முகிலன் காணாமல் போனதை அடுத்து முகிலனுடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கின்றனர். பிப்ரவரி 22-ம் தேதி முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டுமென நீதிமன்றமும் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இன்னமும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. இதையடுத்து முகிலனுக்கு எதிரிகள் யாரும் இல்லை எனவும் ஆலைக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் ஆவணங்களைத் திரட்டி வெளியிட்டதால் மட்டுமே அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தார் குற்ற்ச்சாட்டு வைத்தனர். இதையடுத்து வழக்கு சிபிசிஐடி போலிஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. முகிலனைக் காணவில்லை என சிபிசிஐடி போலிஸார் சுவரொட்டிகள் வைத்துத் தேடி வருவதாக சொல்லப்படுகிறது.

முகிலன் காணாமல் போய் கிட்டதட்ட 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அவருக்கான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் முகிலன் வட இந்தியாவில் உயிரோடு தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சிபிசிஐடி போலிஸின் அறிக்கையில் ’முகிலன் உயிரோடு இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. விரைவில் அவரைக் கண்டுபிடிப்போம்’ எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முகிலன் காணாமல் போனது தொடர்பான வழக்கின் விவரங்களை ஐ நா வுக்கு அளிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அந்த உத்தரவில் ‘மனித் உரிமைகள் மீறப்படாமல் காக்கப்பட வேண்டியது அரசின் கடமை. முகிலன் காணாமல் போனது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான வழக்கு விவரங்களை உடனடியாக ஐ நா விடம் ஒப்படைக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். முகிலன் இறந்துவிட்டதாக காவலர் ஒருவர் கூறியது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை என்ன என்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும்’ எனத் தெரிவிய்த்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்