மீண்டும் சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில்கள் கிளம்பும்: தென்னக ரயில்வே..

Mahendran

புதன், 16 அக்டோபர் 2024 (11:16 IST)
மீண்டும் சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில்கள் கிளம்பும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
 
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த பெருமழையின் விளைவாக பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கிடையே அமைந்துள்ள பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய பல ரயில்கள் நேற்றிரவு ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் ஆவடியில் இருந்து இயக்கப்பட்டன.
 
இதற்கிடையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்ததால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மழை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி இடையிலான பாலத்தில் வெள்ளநீர் வடிந்ததால், ரயில் சேவை மீண்டும் வழக்கம்போல செயல்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
 
மேலும், ஏற்காடு, நீலகிரி, காவேரி, சேரன் போன்ற சில ரயில்கள் வேறு நிலையங்களில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது, ஆனால் அவை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை உரிய நேரத்தில் அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
 
கோவைக்கு செல்வதற்கான விரைவு ரயில் இன்று காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில், அது காலை 10 மணிக்கு கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருவனந்தபுரம் விரைவு, மும்பை சிஎஸ்டி விரைவு மற்றும் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில்கள் பிற நிலையங்களில் இருந்து புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் இப்போது அவை வழக்கம்போல சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
முழுமையாக ரத்து செய்யப்படவுள்ள ஒரே ரயில் மைசூரு-சென்னை காவேரி ரயில் ஆகும், என ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்