மூட்டையில் வைத்து கடத்திய 29 கிலோ தங்கம்.. சுற்றி வளைத்து பறிமுதல் செய்த பறக்கும் படை..!

Mahendran

சனி, 23 மார்ச் 2024 (12:49 IST)
தேர்தல் நேரத்தில் கோடிக்கணக்கான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில் ஒரு மூட்டையில் கடத்தப்பட்ட 29 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தேர்தல் நேரத்தில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் ரொக்கப்பணம் மற்றும் தங்கம் போன்ற ஆபரணங்களை கொண்டு செல்லக்கூடாது என ஏற்கனவே தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
 
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி 6.2 கோடி ரூபாய் மதிப்புள்ள 29 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 
 
சேலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு இந்த தங்கம் கொண்டு செல்லப்படுவதாகவும் ஆனால் அந்த தங்கம் கொண்டு சென்றவர்களிடம் எந்த விதமான ஆவணங்களும் இல்லை என்பதை அடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். 
 
அது ஒரு நகை கடைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்துள்ளதாக பறக்கும் படை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்