நேருக்கு நேர் மல்லுகட்டிய வளர்மதி, நிர்மலா பெரியசாமி: அதிமுகவில் களோபரம்!

செவ்வாய், 21 மார்ச் 2017 (10:59 IST)
அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நட்சத்திர பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் நிர்மலா பெரியசாமியும், முன்னாள் அமைச்சர் வளர்மதியும் நேருக்கு நேர் வாக்குவாதம் செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
இந்த கூட்டத்தில் பேசிய நிர்மலா பெரியசாமி ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் ஆதரவு உள்ளதால் அவர் அதிக வாக்குகளை பெறுவார் என கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வளர்மதி அவரை பற்றி இங்கு பேசக்கூடாது என்றார்.
 
மக்கள் செல்வக்கு உள்ளவரை பற்றி பேசுவதில் தவறில்லை என ஒரே போடாக நிர்மலா பெரியசாமி கூற, நீங்கள் எல்லாம் ஒரு முடிவோடு தான் இருக்கிறீர்களா? அப்படியென்றால் ஏன் இங்கு வருகிறீர்கள்? என்று வளர்மதி கேட்டார். ஜெயலலிதா தொடங்கிய கட்சியும், இரட்டை இலை சின்னமும் இங்கு இருப்பதால் தான் வருகிறோம்.
 
எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசிக்கொள்கிறேன் என கூறிவிட்டு வெளியே செல்ல முயன்ற நிர்மலா பெரியசாமியிடம் வளர்மதி ஆவேசமாக வாக்குவாதம் செய்தார். நிர்மலாவும் அவருக்கு பதிலடி கொடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்