நாகை – இலங்கை பயணிகள் கப்பல் தயார்! டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (09:37 IST)
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு செல்லும் புதிய பயணிகள் கப்பல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.



இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஏராளமான விமான சேவைகள் இருந்து வந்தாலும் பயணிகள் கப்பல் சேவை இல்லாமல் இருந்து வருகிறது. 1983 வரை ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் சேவை இருந்து வந்தது. ஆனால் அந்த சமயம் தொடங்கி இருந்த இலங்கை உள்நாட்டு யுத்தம் காரணமாக பயணிகள் கப்பல் சேவையும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் 40 ஆண்டுகள் கழித்து இரு நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய பயணிகள் கப்பல் சேவை தொடங்குகிறது. இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் இதற்காக வடிவமைத்துள்ள கப்பல் கொச்சினிலிருந்து தற்போது நாகப்பட்டினம் வந்து சேர்ந்துள்ளது.

இந்த கப்பல் இன்று நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கும், நாளை இலங்கையில் இருந்து நாகப்பட்டினத்துக்கும் சோதனை ஓட்டம் செய்யப்பட உள்ளது. அதன் பின்னர் அக்டோபர் 10 அன்று அதிகாரப் பூர்வமாக நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு தனது முதல் பயணத்தை இந்த கப்பல் தொடங்குகிறது.

இந்த கப்பலில் பயணிக்க பாஸ்போர்ட் இ-விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் பயணிக்கும் பயணிகள் தங்களுடன் அதிக பட்சம் 50 கிலோ எடை உள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம். இந்த கப்பலில் பயணிக்க டிக்கெட் விலை ரூ 7500 வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

அக்டோபர் 10 தொடங்கும் இந்த பயணிகள் கப்பல் சேவை 10 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. பின்னர் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலைகள் உருவாகும் வாய்ப்புள்ளதால் இதற்கு பின்னர் ஜனவரியில் மீண்டும் இந்த பயணிகள் கப்பல் சேவை தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்