காதல் திருமணம் செய்த மகள் - குடும்பத்தில் 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (14:36 IST)
தங்களை மீறி  மகள் திருமணம் செய்து கொண்டதால் விரக்தி அடைந்த குடும்பத்தினர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஊர் பெத்தநாயக்கன் பாளையம். அங்கு வசிப்பவர் ராஜேந்திரன்(50) மற்றும் அவரின் மனைவி  ராணி(45). அவர்களுக்கு மோகனா(21), ஆர்த்தி (19) என இரண்டு மகள்களும், நவீன்குமார் (15) என ஒரு மகனும் உள்ளனர். அதில் ஆர்த்தி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, தமிழக அரசு வேலையை பெற டி.என்.பி.எஸ்-சி தேர்வுக்கு பயிற்சி செய்து வந்தார்.
 
அந்நிலையில், அவருக்கும், பெரிய கவுண்டாபுரம் பகுதியை சேர்ந்த மணி என்ற ஆட்டோ ஒட்டுனருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த விவாகரம் மோகனாவின் பெற்றோருக்கு தெரிய வர அவர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  மணியை சந்தித்து பேச தடையும் விதித்தனர். மேலும், இந்த விவகாரம் ஊர் மக்களுக்கும் தெரியவந்தது. அதனால் அவரின் பெற்றோர்கள் அவமானம் அடைந்தனர். ஆனாலும், மோகனா அடிக்கடி மணியை சந்தித்து வந்தார். 
 
இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு, வீட்டை விட்டு வெளியேறிய மோகனா, மணியை திருமணம் செய்து கொண்டார். மேலும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என போலீசாரிடமும் அவர்கள் புகார் அளித்தனர். இதனால், இந்த தகவலை மோகனாவின் பெற்றோருக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.  மேலும், இதுபற்றி பேச காவல் நிலையத்திற்கு வருமாறு மோகனாவின் பெற்றோருக்கு அழைப்பு விடுத்தனர்.
 
இதனால் மனவேதனை அடைந்த மோகனாவின் பெற்றோர்கள், நேற்று இரவு குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தனது மகள் மற்றும்  மகனுக்கு கொடுத்து விட்டு அவர்களும் குடித்தனர். இதில் வாயில் நுரை தள்ளி அனைவரும் இறந்துவிட்டனர்.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்