மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி..! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி.!!

Senthil Velan

செவ்வாய், 2 ஜூலை 2024 (13:54 IST)
இரண்டாம் கட்டமாக கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
 
மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிடக்கோரி, வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ்வரன், மெட்ரோ நிலையங்களில் சாய்வுதளம் அமைக்கப்பட்டதாக 2017-ல் அரசு அறிவித்தது என்றும் ஆனால், 2020-ல் வெளியிடப்பட்ட கூடுதல் அறிக்கையில் 40 சதவிகிதம் மட்டுமே முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். சக்கர நாற்காலிகள் இருந்தும் மாற்றுத்திறனாளிகளால் ரயில் நிலையத்தை பயன்படுத்த முடிவதில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், 'தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து ரயில்கள் இயக்கப்படுவதால் இரவு 12.30 முதல் அதிகாலை 5.30 மணி வரை மட்டுமே சரிபார்ப்பு பணிகள் நடைபெறுகிறது என்றும் அதனால், பணிகள் முடிக்க சில மாதங்கள் ஆகும் என்றும் விளக்கம் அளித்தார்.
 
மேலும், ரயில் பெட்டிகள் மற்றும் நடைமேடைகளுக்கு இடையேயான இடைவெளியை குறைக்க மாற்றம் செய்தால் ஒட்டுமொத்த கட்டுமானமும் பாதிக்கப்படும் என்று அவர் கூறினார். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

ALSO READ: தலைமறைவு குற்றவாளி..! விஜய் மல்லையாவிற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சிபிஐ நீதிமன்றம்
 
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆய்வு செய்ய ஏன் அறிவுறுத்தவில்லை என அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்