நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பதவிப்பறிப்பு மசோதாவிற்கு நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவிப்பறிப்பு மசோதாவை தாக்கல் செய்தார். இந்த புதிய மசோதாவின்படி, மக்கள் பிரதிநிதிகளான எம்.பி, எம்.எல்.ஏக்கள் தவறு செய்து சிறைக்கு சென்றால், 30 நாட்களுக்குள் விடுதலையாகாவிட்டால் அவர்களது பதவி பறிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதா குறித்து ஆதரவு கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால் அவர்களது பதவி நீக்கப்படுவது சரிதானே! அப்போதுதான் ஒரு ஒழுங்கு இருக்கும். இதுபோன்ற நிறைய சீர்திருத்தங்கள் அரசியலில் தேவை” என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த சட்டத்தை சாதகமாக பயன்படுத்தி ஆளும் கட்சியினர் எதிர்கட்சியினரை 30 நாட்களுக்கும் மேல் சிறையில் அடைத்து பதவியை பறிக்கும் அபாயமும் உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Edit by Prasanth.K