பள்ளி வளாகத்தில் வெடித்த சக்திவாய்ந்த வெடிபொருட்கள்.. ஒரு மாணவன் உள்பட 2 பேர் படுகாயம்..!

Mahendran

வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (11:12 IST)
கேரளா, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடக்கந்தராவில் ஒரு பள்ளி வளாகத்திற்கு வெளியே சக்திவாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரளாவில் உள்ள வியாசா வித்யா பீடம் முன்பள்ளிக்கு அருகில், 10 வயது மாணவனான நாராயணன் இந்த வெடிபொருட்களை கண்டெடுத்தான். அதில் ஒன்றை அவன் கீழே வீசியபோது, அது வெடித்து, பயங்கர சத்தத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அந்த மாணவன் மற்றும் அருகில் இருந்த 84 வயது லீலா என்ற மூதாட்டிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.
 
உடனடியாக, பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனையிட்டபோது, ஒரு வாளியில் மேலும் நான்கு வெடிபொருட்கள் இருப்பதை கண்டெடுத்தனர். இந்த வெடிபொருட்கள் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
 
காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு வடக்கு போலீசார், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வெடிபொருட்களைப் பயன்படுத்தியதற்காகவும், குழந்தைகளின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டதற்காகவும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்