நீட் குறித்து பொது மேடையில் விவாதம் - முதல்வருக்கு ஈபிஎஸ் சவாலா?

வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (17:46 IST)
நீட் தேர்வு குறித்து பொது மேடையில் விவாதம் செய்ய தயார் என, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் மதுரை புதூர் பகுதியில் இன்று (பிப். 11) நடைபெற்றது. இதில், எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் ஒரு சவால் விட்டார். உங்களுடைய சவாலை நாங்கள் ஏற்கிறோம்.
 
திமுக ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என கூறினீர்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து 9 மாதம் கடந்த நிலையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. பொய் பேசுவதற்கான நோபல் பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கலாம்.
 
தேர்தல் சமயத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார். தற்போது தொடந்து மத்தியில் பேசி நீட் தேர்வை ரத்து செய்வோம் என்கிறார். தொடர்ந்து வலியுறுத்தி நீட் தேர்வை ரத்து செய்வதுதான் உங்கள் ரகசியமா?? ‘பிளேட்’டை மாற்றும் வேலையை திமுகவினர் செய்து வருகின்றனர்.
 
மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி நீட் தேர்வை ரத்து செய்யலாம் என்ற ரகசியத்தைக் கண்டுபிடித்து வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டமே அளிக்கலாம். நீட் குறித்து பொது மேடையில் விவாதிக்க நானும், ஓபிஎஸ்ஸும் தயார். நாட்டின் முதல்வர் மக்களிடம் நீட் குறித்து பொய்யை பரப்புகிறார்” என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்