பால் விலையை தொடர்ந்து மின் கட்டணமும் உயர்த்தப்படுமா?- அமைச்சர் விளக்கம்

வியாழன், 12 செப்டம்பர் 2019 (11:01 IST)
சில நாட்களுக்கு முன்னால் பால் விலை உயர்த்தப்பட்டதை போல மின் கட்டணமும் உயர்த்தப்பட இருப்பதாக வெளியான தகவலுக்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி மின் கட்டணம் உயர்த்தும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி “ தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்கான எந்த திட்டமும் இல்லை. புதிய மின் இணைப்புகளுக்கான கட்டணததை உயர்த்துவது குறித்துதான் பேச வேண்டியிருக்கிறது.

இந்த ஆண்டு மின்சார வாரியம் மிகப்பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 7 ஆயிரம் கோடி நிதிச்சுமையில் சிக்கியிருக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம். ஆனாலும் இன்னும் சில மாதங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாது” என தெரிவித்துள்ளார்.

கஜா புயல் பாதிப்பின் போது பழுதடைந்த மின் இணைப்புகளை சரி செய்வது, நிலக்கரி கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு அதிகரித்த செலவுகளால் மின்சார வாரியத்திற்கு இந்த நிதிசுமை ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து முதலமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்னும் சில மாதங்களுக்கு கட்டணம் உயர்த்தப்படாது என்றாலும் இந்த நிதி சுமை நீடிக்கும் பட்சத்தில் மின் கட்டணம் உயர வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்