நடிகர் ஸ்ரீகாந்த், பிரசாத் என்பவரிடம் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியதாகவும், அவற்றை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுமட்டுமின்றி, நடிகர் கிருஷ்ணா மீதும் இதே குற்றச்சாட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், விசாரணைக்கு வருமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரசாத் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரிடமும் ஒரு பிரபல நடிகை கொகைன் வாங்கியதாகவும், மற்றொரு நடிகரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் உள்ள பல நட்சத்திரங்கள் இந்த போதைப்பொருள் விவகாரத்தில் சிக்குவார்கள் என்று பரவலாக பேசப்படுவதால், திரையுலக வட்டாரத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
பப் பார்ட்டிகளுக்கு ஏற்பாடு செய்து, அதில் சினிமா நடிகர் நடிகைகளை வரவழைத்து, அவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து, பின்னர் மிரட்டி பணம் பறிப்பது, படங்களில் நடிக்க கால்ஷீட் பெறுவது போன்ற செயல்களில் பிரசாத் ஈடுபட்டிருப்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்த போதைப்பொருள் விவகாரத்தில் வேறு யார் யார் சிக்குவார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.