கட்சியில் காலியாகும் மாவட்ட செயலாளர்கள் கூடாரம்… அலறி அடித்து அறிக்கை விட்ட தேமுதிக தலைமை!

வெள்ளி, 11 ஜூன் 2021 (07:50 IST)

தேமுதிக வில் இருந்து மாவட்ட செயலாளர்கள் எல்லாம் வேறு கட்சிகளுக்கு தாவ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தேர்தல் முடிந்ததும் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததாலும்,கொரோனா பரவல் காரணமாகவும், கூட்டம் சேர்க்கக் கூடாது என்பதற்காகவும் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடியவில்லை. வெகு விரைவில் ஊரடங்கு முடிந்தவுடன் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறோம்,

இதில் மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை எடுத்துச் சொல்லலாம். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். தேர்தலுக்கு முன்பு யாருடன் கூட்டணி என்பதை மாசெக்களிடம் கேட்ட பிறகே முடிவெடுக்கிறோம். அதேபோல் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் மாவட்டச் செயலாளர்களை நேரில் அழைத்து தேமுதிகவை எப்படி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதை நாம் அனைவரும் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். மேலும் தேமுதிகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

நிர்வாகிகள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம். மேலும் சமூக தளங்களில் தவறான செய்தி பரப்புவது, தலைமைக்கு களங்கம் விளைவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் தேமுதிகவின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஊரடங்கு முடிந்தவுடனோ அல்லது அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றோ மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை வெகுவிரைவில் நடத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எனவே நிர்வாகிகள் உறுதியோடு இருந்து வளர்ச்சியை நோக்கி பயணிப்போம்.’ எனக் கூறப்படடுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்