என்னுடை வெற்றியை தடுக்கவே இந்த சோதனை: ரெய்டு குறித்து வாய் திறந்த தினகரன்

வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (15:41 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் இன்று காலை திடீரென வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நடிகர் சரத்குமார்,தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் இல்லங்களிலும் ரெய்டு நடைபெற்றுவருகிறது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.


 

இந்த ரெய்டு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், இந்த வருமானவரி சோதனை ஆதாரங்களின் அடிப்படையில்தான் நடக்கிறது. பாஜகவுக்கும் இந்த சோதனைக்கும் இந்த தொடர்பும் கிடையாது. கறுப்பு பணம், ஊழலுக்கு எதிரான கொள்கையை கொண்டது பாஜக. எனவே இந்த வருமான வரி சோதனையை பாஜக ஆதரிக்கிறது என்றார்.

இந்த நிலையில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரன் கூறுகையில், ஆர்.கே. நகர் தொகுதியில் எனது வெற்றி உறிதியாகிவிட்டது. எனவே அதனை தடுக்க தேர்தலை நிறுத்த சதி நடக்கிறது என்று கூறினார். மேலும் ஆதாரங்களின் அடிப்படையில்தான் சோதனை நடப்பது குறித்து தமிழிசைக்கு எப்படி தெரியும்?
என்றும் கேள்வி எழுப்பினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்